சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த இடத்தை தேர்வு செய்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதையடுத்து பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்துக்கு பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு மீனவ குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள், திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி போராட்டங்களை முன்னெடுத்தனர். திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர் அமைப்புகள் எச்சரித்திருந்தன.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்! மீனவர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை! புதிய திருப்பம்!

மேலும், கடலில் மீன்பிடித்தல், படகுகளை நிறுத்துதல், வலைகளை உலர்த்துதல் உள்ளிட்ட தங்களது அன்றாட தொழில்கள் பாதிக்கப்படலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலம் தொடர்பாக தங்களுக்கு நீண்டகால உரிமை இருப்பதாகவும் சில மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையே, பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் கூடுதல் வாகனப் போக்குவரத்து ஏற்படும் என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளும் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் பட்டினப்பாக்கம் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை கோயில் அருகே மாற்று இடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக இதுவரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. மாற்று இடம் இறுதி செய்யப்பட்ட பின்னர் அரசு அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!