தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளக மோதல் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மாவட்ட செயலர்கள் அமைச்சர் பதவி கோரி கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொண்டர்கள், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது "மக்கள் இயக்க உழைப்பாளர்களுக்கே பதவி" என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் கட்சியில் இணைந்தனர். ஆனால், கட்சியின் 60 சதவீத பதவிகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், மற்றவை வெளியில் இருந்து வந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலின்போது கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத 106 பேருக்கு சீட் வழங்கப்பட்டது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்கப்பட்டபோது, சீனியர் எம்.எல்.ஏ.க்களான தஞ்சாவூர் சரவணன், ஈ.சி.ஆர். சரவணமூர்த்தி, மதுரை கல்லாணை தங்கபாண்டி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

அதற்கு பதிலாக, கட்சியில் ஒப்பீட்டளவில் புதியவர்களான கீர்த்தனா, குமார், ரஞ்சித்குமார், ஸ்ரீநாத், ராஜிவ், லோகேஷ் தமிழ்செல்வன், கமலி உள்ளிட்ட ஏழு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது பென்னாகரம் கஜேந்திரன், ஊத்தங்கரை இளையராஜா, திருப்பத்தூர் திருப்பதி, வேலூர் வினோத் கண்ணன், நிலக்கோட்டை அய்யனார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் பதவி கோரி தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். மேலும், அமைச்சர்களாக உள்ள சிலரும் மாவட்ட செயலர் பதவி கோரி வருகின்றனர். இதனால் தற்போதைய அமைச்சர்கள் இடையே கலக்கம் நிலவுகிறது.
இந்நிலையில், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைப்பு மாவட்டங்களைப் பிரித்து, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து சீனியர் மாவட்ட செயலர்கள், "ஏற்கனவே எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். இப்போது இருக்கும் பதவியையும் பறிக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் தங்களுக்கு பதவி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் இயக்க நிர்வாகிகளும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால், பொதுச்செயலர் ஆனந்த் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த உள்ளகப் பிரச்சினை கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்! விஜய் வெற்றிக்கு கண்ணீர் மல்க வாழ்த்து சொன்னவர்!