சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தொடர்ந்து வலுவான இழுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் விலகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், பிரபல நடிகை கவுதமி அதிமுகவிலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கவுதமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு விலகுகிறேன். சமூக சேவை செய்ய ஏதுவாக கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் மேலும், “கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனதார நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக பலமிழந்து விட்டது! இதுதான் சரியான நேரம்! நிர்வாகிகளுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த த.வெ.க.வின் எதிர்பாராத வளர்ச்சி, 75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர்.
நேற்றும் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அதிமுக, திமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் த.வெ.க.வில் இணைந்தனர். இந்தச் சூழலில் நடிகை கவுதமியின் விலகல் அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுதமி அதிமுகவில் சேர்ந்து பல ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது விலகல் கட்சியின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. த.வெ.க.வின் வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து கட்சியினர் இடையே கவலை நிலவுகிறது.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன்! விஜய் வெற்றிக்கு கண்ணீர் மல்க வாழ்த்து சொன்னவர்!