தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் 5.73 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வரிசையில் நின்று கொண்டிருக்கும் நிலையில், சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திருவொற்றியூர் தொகுதியில் உள்ள 231 மற்றும் 233 ஆம் எண் வாக்குச்சாவடிகளில் இரண்டு EVM இயந்திரங்கள் பழுதடைந்ததால், வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அதிகாலையிலேயே வந்து நின்ற மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், பாளையங்கோட்டை தொகுதியில் 163-வது வாக்குச்சாவடியில் EVM பழுது காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் வாக்குப்பதிவு தடைபட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கபாண்டிபுரம் 100-வது வாக்குச்சாவடியிலும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு தாமதம் ஏற்பட்டது. உத்தரமேரூர் தொகுதியில் 22-வது வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதடைந்து வாக்குப்பதிவே தொடங்கவில்லை.
இதையும் படிங்க: Voting முடிஞ்சதும் Trip கன்ஃபார்ம்!! தேர்தல் பிரசார களைப்பு தீர குளுகுளு சுற்றுலா கிளம்பும் தலைவர்கள்!!
மதுரை மேற்கு தொகுதியில் ஜெய்ஹிந்த்புரம் யாதவா மெட்ரிக் பள்ளி 316-வது வாக்குச்சாவடியில் VVPAT இயந்திரத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் புதிய VVPAT இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது. மதுரை கிழக்கு தொகுதி மாங்குளம் பகுதியில் வாக்குச்சாவடியில் விளக்கு வசதி இல்லாததால் வாக்காளர்களும் முகவர்களும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டி 86-வது வாக்குச்சாவடியில் இயந்திரம் இயங்காததால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. புலிக்கண்மாய் கிராமம், மேட்டுப்பாளையம் தொகுதி தொட்டபாவி 162-வது வாக்குச்சாவடி, ராமேஸ்வரம் நகைக்கடை பஜார் உள்ளிட்ட பல இடங்களிலும் EVM பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. கொரட்டூரில் தபால் ஓட்டு கிடைக்காததால் அம்பத்தூர் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் உடனடியாக இயந்திரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு, பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவை மீண்டும் தொடங்கினர். வாக்காளர்கள் பொறுமையுடன் ஒத்துழைப்பு அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெயில் அதிகமாக இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இத்தகைய சிறு சிறு தொழில்நுட்பக் கோளாறுகள் தேர்தல் நாளில் இயல்பானவை என்றாலும், வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்காளர் அட்டை இல்லையா? இந்த 12 ஆதாரங்கள் போதுமே?! இந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்!!