கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கால அவகாசத்தை நீட்டி தவெக அரசு அரசாணை பிறப்பிப்பதா என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதப்படும் இத்திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை அரசாணை பிறப்பித்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல்களை சுட்டி காட்டினார்.

கிள்ளியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமைவதாக இருந்த இத்திட்டம் அமையப்பெற்றால், சுற்றுசூழல் பாதிப்படைந்து அதனால் கொடிய நோய்கள் ஏற்படுவதோடு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் டிடிவி தினகரன் கூறினார். இந்த நிலையில், IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசம் முடிவடையும் நாளில் மக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்க்காமல், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் நிலம் ஒதுக்கிய ஆணையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: லிஸ்டில் 2 சர்ச்சை அமைச்சர்கள்..!! அமைச்சரவை மாற்றம் குறித்து பரபரப்பு; கூட்டணிக் கட்சிகளுக்கு ஜாக்பாட்?