தமிழக அமைச்சர்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஆளும் த.வெ.க. அரசு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையை ஒத்த வகையில், தற்போதைய அமைச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்த தகவலின்படி, முதல்வர் விஜய் தற்போது சில அரசியல் மற்றும் நிர்வாக காரணங்களால் செய்தியாளர்களுக்கு நேரடி பேட்டி வழங்காமல் இருந்து வருகிறார். இருப்பினும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஊடகங்களை சந்திப்பதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் சமீப காலமாக சில அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான முழுமையான தகவல்களை அறியாமல் கருத்து தெரிவிப்பதாகவும், இதனால் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

அதேபோல், அரசு திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களிலும் சில அமைச்சர்கள் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் சிரமங்களை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அமைச்சர்களின் நிர்வாகத் திறன் மற்றும் தகவல் பரிமாற்ற திறனை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகளில் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, ஒவ்வொரு அமைச்சகத்தின் முக்கிய அம்சங்கள், அரசு திட்டங்களின் செயல்பாடு, பொதுமக்களுக்கு தகவல்களை எளிதாக கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரசு திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் பதிலளிக்கும் திறனை வளர்க்கும் வகையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வாரம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாம்களில் அமைச்சர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், செய்தியாளர் சந்திப்புகளில் துறை சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்றும், பொதுவான அரசியல் விவாதங்கள் அல்லது தொடர்பற்ற கேள்விகள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் அமைச்சர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில், த.வெ.க. தலைமையின் இந்த புதிய நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!