நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை நடத்திய யுஜிசி நெட் தேர்விலும் வினாத்தாள் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு தவறுகள் கண்டறியப்பட்டதால், அந்தப் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வின் வினாத்தாள்கள் குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தகவல்களில் தவறுகள், அச்சுப் பிழைகள், மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கணப் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய அறிஞர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சில கேள்விகளின் வாக்கிய அமைப்பில் தவறுகள் இருந்ததுடன், எண்களிலும் குளறுபடிகள் காணப்பட்டுள்ளன. சில கேள்விகளுக்கு தெளிவான விடைகள் இல்லாத நிலையும், ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதும் நிபுணர் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
இதுபோன்ற பல்வேறு தவறுகள் இருப்பதால், குறிப்பிட்ட சில கேள்விகளை மட்டும் நீக்கிவிட்டு அதற்கேற்ப மதிப்பெண் வழங்குவது சரியான தீர்வாக இருக்காது என NTA தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 9-ம் தேதி காலை ஆங்கிலப் பாடத்துக்கும், பிற்பகல் வணிகவியல் பாடத்துக்கும் மறுதேர்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 10-ம் தேதி காலை சமூகவியல் பாடத்துக்கான மறுதேர்வு நடைபெறும். காலை நேரத் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் தேர்வு 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். மறுதேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
இதற்கிடையே, இந்த 3 பாடங்களைத் தவிர்த்து மீதமுள்ள 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்பை NTA வெளியிட்டுள்ளது. விடைக்குறிப்பு தொடர்பான ஆட்சேபனைகளை மாணவர்கள் ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு 11.59 மணி வரை பதிவு செய்யலாம். ஒரு கேள்விக்கு ஆட்சேபனை தெரிவிக்க ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறுவதற்கும் தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய தேர்வாக யுஜிசி நெட் உள்ளது. மேலும், பிஎச்டி சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிக்கவும் இந்தத் தேர்வு பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள் கண்டறியப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?