திருச்செந்தூர் வீரமகேந்திரகோட்டை முகாமில் புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகம் மற்றும் இரட்டைமலை சீனிவாசனார் அரங்கம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தொல் திருமாவளவன் அம்பேத்கர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றினார். அவர் மேடையில் ஏறியதும் மின்சாரம் துண்டிக்கபட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் மின்சாரம் வந்தது. தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாக மின்விநியோகம் தடைபட்டு வருவது பேசு பொருளாக மாறியுள்ளது.
அப்போது பேசிய அவர், மற்ற அரசியல் தலைவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல 2 மணி நேரம் ஆகும் நிலையில், தனக்கு 4 மணி நேரம் வரை பயண நேரம் ஆகிவிடுவதாகக் கூறினார். தனது கார் செல்லும் வழியில் 10 கிலோமீட்டருக்கு ஒருமுறை தொண்டர்கள் திரண்டு நின்று அன்புடன் வரவேற்பதாகவும், இதனால் தனது பயணம் “பேசஞ்சர் ரயில்” போல ஒவ்வொரு இடத்திலும் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!
தமிழக அரசியல் வரலாற்றில் விசிக தற்போது வலுவான அரசியல் சக்தியாகப் பரிணமித்துள்ளதாக தெரிவித்த திருமாவளவன், மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றதுடன், கட்சிக்கென பானை சின்னத்தையும் வென்றெடுத்துள்ளதாக கூறினார்.
தமிழகத்தைத் தாண்டியும் விசிகவின் அரசியல் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கட்சியின் கொடி பறப்பதாக தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அக்டோபர் 4-ஆம் தேதி அம்பேத்கர் வெண்கலச் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாகவும், அங்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிற அமைப்புகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
தெலங்கானாவில் அக்டோபர் 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் போராளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், தெலுங்கு தேசிய எழுச்சி மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
கேரளாவில் மகாத்மா அய்யன்காளி விருதை விசிக சார்பில் வழங்கிய நிகழ்ச்சியிலும் பங்கேற்றதாக கூறிய அவர், அந்த நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர், தமிழக அரசியலில் விஜய் முக்கிய அரசியல் தளத்தில் நிற்பதற்கு விசிகவின் பேராதரவும் ஒரு காரணம் என மலையாளத்தில் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “இத்தனை காலம் நாம் ஆளும் கட்சிகளோடு பயணித்தோம்; இனி நாமே ஆளும் கட்சியாகப் பரிணமிப்போம்” என்ற தனது அரசியல் இலக்கை திருமாவளவன் மீண்டும் வலியுறுத்தினார்.
தற்போதும் கூட்டணி ஆட்சியின் ஒரு அங்கமாக இருந்தாலும், எதிர்காலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு தமிழக மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக விசிக முன்னெடுத்த போராட்டங்கள் அனைத்தும் தமிழக மக்கள், தமிழ் ஈழ மக்கள், மொழி, இனம், சமூக நீதி, அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே நடைபெற்றதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
விசிக இன்னும் ஆளும் கட்சியாக உருவெடுக்காததற்கான காரணத்தை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், “நம்மால் முடியாது” என்ற சிந்தனைப்போக்கே மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது என்றார்.
ஆளும் கட்சியாக வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் தங்களுக்குள் போதிய அளவில் உருவாகவில்லை என்றும், அதனை இலக்காக வைத்து திட்டமிட்டு செயல்படவில்லை என்றும் அவர் கூறினார். எந்தவொரு பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல், அரசு ஊழியராக இருந்த நிலையில் பையுடன் களத்திற்கு வந்தவன் தான் திருமாவளவன் என்றும் அவர் தெரிவித்தார்.
விசிகவுக்கு ஊடகங்கள் தொடக்கம் முதலே ஆதரவாக இருந்ததில்லை என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.10 லட்சம் பேரைத் திரட்டினாலும், அது நாளிதழ்களில் இரண்டு அல்லது மூன்று பத்திகளில், அதுவும் பின்பக்கங்களில் இடம்பெறும் என்றும், ஆனால் கட்சிக்குள் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் அது ஆறு முதல் எட்டு பத்திகளில் முக்கியச் செய்தியாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
விசிகவுக்கு எதிராக கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்புவதற்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், கூட்டணி அரசியலில் விசிக கடைப்பிடித்த நிலைப்பாட்டையும் திருமாவளவன் எடுத்துரைத்தார்.
முதலமைச்சர் பதவி கிடைக்கும் சூழல் அல்லது வாய்ப்புகள் உருவானபோதும், அதனைத் தவிர்த்து துணிச்சலான முடிவுகளை எடுத்ததாக அவர் தெரிவித்தார். கூட்டணித் தலைவராக இருந்த அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்காக, தான் தேர்தலில் போட்டியிடாமல் விலகியதாகவும் திருமாவளவன் கூறினார்.
கூட்டணிக்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளித்த இந்த அரசியல் அறத்தைப் பாராட்டுவதற்கு இங்கு யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கருத்தியல் நட்பு தொடர்கிறது என்பதைத் தான் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
“சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் விசிக ஒவ்வொரு நொடியும் போராடி முன்னேறி வருகிறது” என்று கூறிய அவர், எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கை நோக்கி கட்சியினர் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!