தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும்.
இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று முதல் தொடங்குவதால் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் இருப்பினும் இந்த எட்டு நாட்கள் காலத்தில் பல பொது விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 4 (சனிக்கிழமை) மற்றும் ஏப்ரல் 5 (ஞாயிறு) ஆகிய நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, வேலை நாட்களான நான்கு தினங்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு சற்று இறுக்கமான அட்டவணையை உருவாக்கியுள்ளது.

எனவே நாட்களைக் கடத்தாமல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் முதன்முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறார். சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தனது சொந்த தொகுதியாக இருக்கும் பெரம்பூரில் இருந்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இதையும் படிங்க: #BREAKING: தலைமைச் செயலகத்தில் விஜய்..! பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்..!!