தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தன் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் நேற்று சென்னையில் அறிவித்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், தன் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களையும் அவர் ஒரே நேரத்தில் வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது விஜய் தானே போட்டியிடும் இரு தொகுதிகள். வில்லிவாக்கம், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் களமிறங்க உள்ளார். த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும்,
நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோபி செட்டிப்பாளையத்திலும், கொள்கை பரப்பு பொதுச் செயலர் அருண்ராஜ் திருச்செங்கோட்டிலும், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றத்திலும், பொருளாளர் வெங்கட்ரமணன் மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் நண்பருக்கு தேர்தலில் சீட்! தூத்துக்குடி வேட்பாளராக களம் இறங்கும் நடிகர் ஸ்ரீநாத்!
பட்டியலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், மற்ற கட்சிகளில் இருந்து சமீபத்தில் த.வெ.க.வுக்கு வந்த 106 பேர் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அ.தி.மு.க.வில் இருந்து வந்த வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியிலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருண்குமார் எடப்பாடியில் பழனிசாமிக்கு எதிராகவும் போட்டியிட உள்ளனர்.

தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன் சில மணி நேரங்களுக்கு முன்புதான் த.வெ.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் திருநெல்வேலி தொகுதி கிடைக்காத அதிருப்தியில் அவர் வந்தார். அவருக்கு விஜய் திருநெல்வேலி தொகுதியை ஒதுக்கியுள்ளார். அதேபோல் திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க. செயலர் தூசி மோகன் செய்யாறு தொகுதியிலும், முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணன் நாங்குநேரியிலும், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் ராசிபுரத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்தப் பட்டியலில் சத்யபாமா திருப்பூர் வடக்கு, ஜெ.சி.டி.பிரபாகர் ஆயிரம் விளக்கு, கு.ப.கிருஷ்ணன் லால்குடி உள்ளிட்ட தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. ஆனால் த.வெ.க. மாவட்ட செயலர்களாக உள்ள 62 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேநேரம் விஜய்யின் கார் டிரைவரின் மகன் சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு த.வெ.க.வுக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பழைய நிர்வாகிகளை ஒதுக்கியது ஏன் என்கின்றனர் சிலர். விஜயோ, தன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய முகங்களை கொண்டு வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் களம் இனி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!