கோவை/தஞ்சாவூர்: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் மற்றும் நீர் பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்திருப்பது டெல்டா உள்ளிட்ட தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி தமிழகத்தின் ஜீவநாடி. டெல்டா மாவட்டங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் காவிரி நீர் மிக முக்கியமானது. கர்நாடக அரசு மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை தயாரித்து விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் பூமி பூஜை நடைபெறும் எனவும் சிவக்குமார் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்டா விவசாயிகள் முதல்வர் விஜய்யின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கடந்த ஆட்சியில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசிடம் ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற தலைவர்கள் மூலம் இந்த விவகாரத்தை தீர்க்க முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்து இரண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: Breaking News! திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்! உயர்மட்ட குழு அமைத்து நடவடிக்கை!

எனவே முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கத்தைப் பயன்படுத்தி, கர்நாடக அரசிடம் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி தீர்வு காண்பாரா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். “அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழகத்தின் நீர் உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது” என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தீவிரமான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுப்பார் என விவசாய சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தமிழக-கர்நாடக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நன்றி! அவரை நேரில் சந்திக்க வேண்டும்! யூடியூபர் சவுக்கு சங்கர் விருப்பம்!