விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது 35,000 அடி உயரத்திலும் வை-ஃபை வசதியைப் பயன்படுத்தி இணையதளத்தைச் சுலபமாக இயக்கும் நவீனம் இந்தியாவில் சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயங்கும் ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 2025 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வை-ஃபை திட்டத்தை, கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தியிருப்பதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா அறிமுகப்படுத்திய இந்த இலவச வை-ஃபை திட்டத்திற்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2025 ஜூன் மாதத்தில் 30 சதவீதமாக இருந்த வை-ஃபை பயன்பாடு, 2026 ஜூன் மாதத்தில் 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. வை-ஃபை பயன்படுத்திய 10 லட்சம் பயணிகளில் 86% பேர் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், 14% பேர் மின்னஞ்சல் மற்றும் மெசேஜ்கள் அனுப்புவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த சேவைக்குக் கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது பயணிகளுக்கு இதனை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது.

தற்போது லண்டன், நியூயார்க், நியூஜெர்சி, பிராங்பர்ட், மெல்போர்ன், பாலி, மணிலா, சிங்கப்பூர், ஹாங்காங், மொரிசியஸ் உள்ளிட்ட 28 சர்வதேச வழித்தடங்களில் இயங்கும் குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானங்களில் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. பயணிகள் மத்தியில் கிடைத்துள்ள அமோக ஆதரவைத் தொடர்ந்து, மேலும் பல புதிய சர்வதேச வழித்தடங்களுக்கும் இச்சேவையை விரைவில் விரிவாக்கம் செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!
உள்நாட்டு விமானங்களுக்கும் தேவை: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சர்வதேச விமானங்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு விமானங்களிலும் வை-ஃபை பயன்பாடு உள்ளது. அதேபோல் இந்தியாவிற்குள் இயங்கும் உள்நாட்டு விமானங்களிலும் இந்த வை-ஃபை சேவையை விரிவுபடுத்த வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையிலிருந்து நேரடி விமானங்கள்: சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் ஏர் இந்தியா நேரடி விமானங்கள் இல்லாததால், தமிழ்நாட்டுப் பயணிகள் டெல்லி, மும்பை, பெங்களூரு வழியாக இணைப்பு விமானங்கள் மூலமே செல்ல வேண்டியுள்ளது. இதனால் தமிழகப் பயணிகளுக்கு இந்த வை-ஃபை வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது.
எனவே, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏர் இந்தியா நேரடி விமானங்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.2000 கோடிப்பே... தமிழ்நாடு அரசு தலையில் இடியாய் இறங்கிய செய்தி... சமாளிப்பாரா சி.எம்.விஜய்?