தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சென்னை பனையூர் தலைமை அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது விஜய் எழுப்பிய ஒரு கேள்வி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் நேரடியாகப் போட்டியிட்டார். மீதமுள்ள 232 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இடைப்பாடியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விஜய் பனையூர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். சந்திப்பின்போது விஜய், “நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருப்பீர்கள். மக்கள் நிச்சயம் நமக்கு பலன் தருவார்கள். நான் உங்களுடன் இருப்பேன். வெற்றி பெற்ற பின் நீங்களும் என்னுடன் இருப்பீர்களா?” என்று நேரடியாகக் கேட்டார். அதற்கு வேட்பாளர்கள் அனைவரும் “கண்டிப்பாக இருப்போம்” என்று பதிலளித்தனர்.
இதையும் படிங்க: ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!

த.வெ.க. மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “விஜய் தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார். ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் இரட்டை இலக்க இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்கிறார். பல வேட்பாளர்களை இதுவரை அவர் சந்தித்ததில்லை. பிரசாரத்தின்போதும் வெகு சிலரை மட்டுமே சந்தித்தார். எனவே, வெற்றி பெற்ற பிறகு எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேரத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தவும் இந்த சந்திப்பு முக்கியமானது” என்றனர்.
விஜய் மேலும் பேசுகையில், “கருத்துக் கணிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஓட்டு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி காலை 6 மணிக்கே எண்ணும் மையத்தில் இருங்கள். வெற்றிச் சான்றிதழ் வாங்கிய உடன் நேராக பனையூர் அலுவலகத்துக்கு வாருங்கள். வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஓட்டு எண்ணிக்கையின்போது மிகுந்த கவனத்துடன் இருங்கள். உங்கள் உழைப்புக்கேற்ற பலனை நான் தருவேன்” என்று அறிவுறுத்தினார்.
த.வெ.க. இணைப் பொதுச்செயலர் நிர்மல் குமார், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உண்மை இல்லை. மக்கள் த.வெ.க.வுக்கு திருவிழா போல் ஓட்டு போட்டுள்ளனர். மே 4ம் தேதி உண்மை தெரிந்துவிடும்” என்று தெரிவித்தார்.
ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக விஜய் வேட்பாளர்களுடன் நடத்திய இந்த சந்திப்பு, கட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவின் கொங்கு கோட்டையில் ஓட்டை!! காரியத்தை கச்சிதமாய் முடித்த செந்தில் பாலாஜி!!