சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழகப் பெண்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பெண்களின் தியாகத்தைப் போற்றும் அதே வேளையில், தற்போதைய திமுக ஆட்சியில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் நலத் திட்டங்களை அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும், மரியாதையும் ஆகும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
மகளிர் சுயமாகச் சாதிக்கவும், அவர்களின் பயணத்தை எளிதாக்கவும் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் (அம்மா ஸ்கூட்டர் திட்டம்) மீண்டும் செயல்படுத்தப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை அறிவிப்பு!
பெண்கள் பயணிக்கும் போதும், பணியிடங்களிலும், பெண் பிள்ளைகள் பயிலும் கல்வி நிறுவனங்களிலும் அவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்றும், அதற்குத் தான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய "விடியா திமுக" ஆட்சியில் விலைவாசி உயர்வு மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையால் குடும்பத் தலைவிகள் தத்தளிப்பதாகவும், அந்தச் சுமையைக் குறைப்பதே தனது முதல் கடமை என்றும் இபிஎஸ் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த புரட்சிகரமான திட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்புகள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியை நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!