டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசு, தற்போது தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் திட்டமிட்டபடி இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா செல்ல மறுத்த வங்கதேசத்திற்கு ஆதரவாகவே பாகிஸ்தான் இந்தப் புறக்கணிப்பு முடிவை எடுத்திருந்தது. இருப்பினும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள், கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதிப் போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தன. குறிப்பாக, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரிகள் லாகூருக்குச் சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியுடன் நீண்ட நேரப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போட்டி ரத்தானால் ஏற்படும் சுமார் ₹2,200 கோடி (250 மில்லியன் டாலர்) வருவாய் இழப்பு மற்றும் பாகிஸ்தான் வாரியத்திற்கு விதிக்கப்படக்கூடியக் கடுமையான அபராதங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதன் விளைவாக, பாகிஸ்தான் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு ஐசிசி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தனது எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர் ஷபாஸ் ஷெரீப், "பல்வேறு நாடுகளுடன் நடத்தப்பட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 15-ல் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அணிக்கு அரசு உத்தரவிடுகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைப் பாதுகாக்கவும், உலகளாவிய விளையாட்டின் தொடர்ச்சியை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 15, 2026 அன்று, இலங்கை கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இந்தியா vs பாகிஸ்தான் (குரூப் ஏ) போட்டி நடைபெற உள்ளது.
இந்த அறிவிப்பால் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்தப் பெரும் முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே தங்கள் அணி கொழும்பு செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது பாகிஸ்தானும் சம்மதித்துள்ளதால், உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மகா யுத்தம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.