தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா தாக்கல் செய்த பொது நல மனுவில், மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று நடைமுறைகளைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். அதனால் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா எனத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு விண்ணப்பித்த போது, அதுபோல எந்தத் திட்டமும் இல்லை எனப் பதிலளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அதேபோலச் சுகாதாரத் துறை அளித்த பதிலில், மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டதன் மூலம், ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டம் ஏதும் அமலில் இல்லை என்பது தெளிவாகிறது என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வாவ்வ்..!! 2026 வருஷத்துல இத்தனை லீவா..!! லிஸ்ட்டை வெளியிட்ட தமிழக அரசு..!! ரெடியா மக்களே..!!
அதனால் ஏழை பெண்கள், கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்களை வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை எனத் தெரிவித்தார்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்குக் கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த திட்டங்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் விளக்கமளித்தார். ஆனால், அரசின் இந்தத் திட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாப்கின் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர்? பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண்கள் எண்ணிக்கை எவ்வளவு ஆகிய விவரங்களை வழங்கும்படி, தமிழக அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: மக்களின் துயரத்திற்கு தமிழக அரசு தான் காரணம்! வடிகால் பணிகள் முழுமையடையாதது ஏன்? தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்வி!