கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர் மீது, ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய வீடியோவை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளையைக் கேள்விகேட்கும் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவது, சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிலைமை தொடர்கதையாகி வருகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறே, இன்றைய திமுக ஆட்சி இயற்கைவள சுரண்டலையும், வன்முறை அரசியலையும் ஆதரித்து வருகிறது என்றும் இன்று, செய்தியாளர்கள் வரை நேரடியாக மோசமாகத் தாக்கப்படுவது, இங்கு நடப்பது மக்களாட்சியா அல்லது ரவுடிகளின் அச்சுறுத்தல் ஆட்சியா என்றே மீண்டும் கேட்க வைக்கிறது என்று கூறினார்.

திமுக ஆட்சியின் முகங்களாக குண்டர்களும், சமூக விரோதிகளும், வன்முறையாளர்களுமே இருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் உதாரணம் என்றார். தொடர்ந்து, மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டுவரும் நபர்களை ஊக்குவித்து, அவர்களை அதிகாரத்தில் அமரவைக்கும் திமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிவது உறுதி என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்எல்ஏ பழனியாண்டி, உடனிருந்த அவரது மகன் மற்றும் குண்டர்கள் ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
அரசு முன்வந்து பழனியாண்டியை சட்டமன்ற உறுப்பினார் பொறுப்பிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதி பொறுப்பை மறந்து, அராஜகத்தில் ஈடுபட்ட அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை சுதந்திரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: விஜயின் அடுத்த பிரச்சாரம் எப்போது? அனுமதி கேட்டு மனு கொடுத்த கட்சி நிர்வாகிகள்..!