சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பிறகு, பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்துள்ளார் என அடுத்தடுத்து போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் கைதான அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை வழங்கியதாக தெரியவந்தது. விசாரணையில், பிரசாத் ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000க்கு விற்றதாகவும், ஸ்ரீகாந்த் 40 முறை இவரிடம் போதைப்பொருள் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: போதைப் பொருள் விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிரசாத்திடமிருந்து ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியது செல்போன் மூலம் அம்பலமானது. நடிகை ஸ்ரீகாந்தியின் செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் பிரசாத்திடம் பேசியது, பணம் அனுப்பியது உறுதியானது.

மேலும், அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு, போதைப்பொருள் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களின் ஒருவர். 2002இல் ரோஜா கூட்டம் என்ற படத்தில் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, மெர்குரி பூக்கள், நண்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபலமானார். தற்போது தீங்கரை என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாடம் எடுக்கிற அருகதை திமுகவுக்கு இல்ல! பாஜக இப்படி செஞ்சு இருக்கவே கூடாது...அதிமுக கொந்தளிப்பு!