தமிழகத்தில் வரும் ஜூன் 24 ஆம் தேதியுடன் 6 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்காக வரும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களும் கிடைக்கும் சூழல் உள்ளது. இதில், திமுக சார்பில் 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் தற்போது வரை மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை யாருக்கு வழங்கலாம் என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, கொள்கை பரப்புச் செயலாளர் வித்யா, முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தைப் பெறுவது தேமுதிகவின் உரிமை. 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே இந்த முடிவு எட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவிற்கு ஒரு சீட் வழங்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!
அதிமுக கூட்டணிக்குள் பாமக, தேமுதிகவை உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். மாநிலங்களவை எம்.பி.சீட் கிடைக்காவிட்டால் தேமுதிக கூட்டணிக்குள் நீடிக்குமா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. மறுபுறம் பாமகவில் அப்பா - மகன் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளதால், அதுவும் மோதலுக்கு காரணமே பாஜக கூட்டணிக்கு செல்லலாமா? வேண்டாமா? என்பது தான் எனக்கூறப்படுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமியின் கவனம் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ராஜ்யசபா சீட்டுக்கு அழுத்தம் தரும் தேமுதிக.. உட்கட்சி பூசலால் உடையும் பாமக.. யாரை தேர்ந்தெடுக்க போகிறார் இபிஎஸ்..!