சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியையான நிகிதா என்பவர், தனது காரில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனதாகவும், அஜித் குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார் உள்ளிட்டோர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின்போது, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அஜித் குமாரை மடப்புரம் கோவிலின் பின்புறத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் விளைவாக, அஜித் குமார் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் 50 இடங்களில் காயங்கள் இருந்ததும், மூளை மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததும் உறுதியானது. இந்தச் சம்பவம் காவல் மரணமாக பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு.. தடை உத்தரவை ரத்து பண்ணுங்க! சுப்ரீம் கோர்ட்டில் திமுக மேல்முறையீடு..!
சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட தனிப்படை காவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் படி முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சிபிஐ தாக்கல் செய்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வ பாண்டி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: உயிரிழந்த அஜித் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!