மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுனரை அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பேருந்து ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக் அறிவித்தனர். இதனை அடுத்து உதவி மேலாளர் மன்னிப்பு கூறுவது போல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அன்புமணி ராமதாஸ் கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு என கேள்வி அனுப்பியுள்ளார். ஓட்டுனரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது கொடுமையானது எனவும் போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 35 புதிய கல்லூரிகள்; பேராசிரியரை நியமிக்காத திமுக அரசு... கழுவி ஊற்றிய அன்புமணி!!

பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக, பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது உயரதிகாரியான மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும் என்று கூறியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை. இது தொடர்பாக உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது, பயணிகளை தரக்குறைவாக பேசிய உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை தாம் அணிந்திருந்த காலணியால் அடித்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம் என அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு. இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை என்று சாடினார்.

பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும்பட்சத்தின் அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால், பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு, யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள். இப்படி ஒரு சூழலைத் தான் தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா? என்பதை அரசு விளக்க வேண்டும்.,உதவி மேலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்., இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!