தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த எட்டு மீனவர்கள், இன்று அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பன்னாட்டு கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறலுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலமும், அவர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளையடிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பது தான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதாகவும் கடந்த சில நாள்களில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலும், இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையும் பா.ம.க.வின் நீண்ட நாள் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளதாகவும், இவை நிச்சயம் தொடரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்.. ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி..!

தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ள அன்புமணி, இத்தகைய சூழலில் இரு தரப்பு மீனவர்களும் பயனடையும் வகையில் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான திட்டத்தை வகுப்பது தான் சரியானதாக இருக்கும் என்றும் இதை மத்திய அரசு தான் செய்ய முடியும் எனும் நிலையில், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு தான் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்வதாகவும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது என்றும் கூறிய அவர், அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வரிப் போட்டு விவசாயி வயித்துல அடிக்காதீங்க... நிலத்தடி நீர் வரிக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!