பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 பேர் மீது காவல்துறை குற்றம்சாட்டியது. இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். சம்பவம் செந்தில் உள்ளிட்ட இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கை தயாரித்து சமர்ப்பித்துள்ளது காவல்துறை.
ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜாமீன் வழங்கப்பட்டது தவறு என்றும், வழக்கின் தீவிரத்தை கீழ் நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை என்றும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தும் அபாயம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது.
இதனையடுத்து அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். 12 பேரும் இன்று சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் சரணடைய அவகாசம் கோரி அஸ்வத்தாமன் உள்பட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: ஆன்மீகமா? ஸ்ட்ராடஜியா? விஜயின் அடுத்த அடியில் வேளாங்கண்ணி!
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பின்னர் ஜாமின் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் சரணடைய வரும் மார்ச் 13 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மார்ச் 13 ஆம் தேதி வரை தினமும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, ஜாமினில் வெளிவந்த ரவுடி அஸ்வத்தாமன், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். சென்னை போலீசாரின் 'லுக் அவுட்' நோட்டீஸ் அமலில் இருந்த நிலையில், பாங்காங் செல்ல முயன்ற அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர் மீது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல முயன்றதற்காக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!