அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் மேனாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் குறித்து இன்று அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பதவி ஆசைக்காகத் தாய்க்கழகத்திற்குத் துரோகம் இழைப்பவர்களின் செயல்களைத் தொண்டர்கள் முறியடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (13.05.2026) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், கழகத்தின் அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி ஆளும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ-க்கள் குறித்து எடப்பாடியார் பின்வருமாறு சாடியுள்ளார். வெற்றி பெற்ற ஒருசில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகளைப் பெற வேண்டும் என்ற பேராசையில் துரோகம் இழைத்துள்ளனர்.
6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்படும் என்ற ஆளும் கட்சியின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அவர்கள் சுயநலத்திற்காகச் செயல்பட்டுள்ளனர். இவர்களின் இந்தச் செயலை ஊடகங்களில் பார்த்த கழகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

தன் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமான விளக்கங்களை அளித்துள்ளார். தான் AC அறையில் அமர்ந்து அரசியல் செய்வதாகக் கூறுவது பொய் என்றும், கடந்த ஆண்டு ஜூலை முதல் 196 தொகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாகச் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோதும், இப்போதும் தொண்டர்களையும் பொதுமக்களையும் எப்போதும் சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் 8-ஆவது முறையாகத் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுகவின் வரலாற்றை நினைவு கூர்ந்த அவர், தோல்விகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவித்தார். 1980 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளின் போதும் முக்கியத் தலைவர்கள் பிரிந்து சென்றனர்; ஆனால் தொண்டர்கள் கட்சியைக் காத்து நின்றார்கள்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயல்களை முறியடித்து, மீண்டும் கழகத்தின் பொற்கால ஆட்சி அமைய அனைவரும் அரும்பணியாற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். பதவி ஆசைக்காகத் துரோகம் இழைக்கும் ஒருசில முன்னாள் அமைச்சர்களிடம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!