காவிரி மேலாண்மை ஆணையத்தால் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்காது என்றும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அணைகளைக் நேரடியாகக் கையாளும் அதிகாரம் கொண்ட 'காவிரி மேலாண்மை வாரியத்தை' அமைக்க மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்றத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்:
கர்நாடக அணைகளில் பெங்களூர் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாக அம்மாநில அரசு கூறியது அப்பட்டமான பொய். ஹேமாவதி, கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 60.21 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்! முதல்வர் விஜய் தலையிட்டு வரையறை செய்ய அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
அணைகளின் குறைந்தபட்ச நீர் இருப்பான 23 டி.எம்.சி மற்றும் பெங்களூர் குடிநீருக்கான 5 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தினாலும், மீதமுள்ள 32 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டிற்குத் தாராளமாகத் திறக்க முடியும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் கர்நாடகாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, தற்போதைய நிலையே தொடரும் என ஆணையம் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்.

கடந்த ஜூன் 1 முதல் இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை கர்நாடகம் பாக்கி வைத்துள்ளது. ஆனால், தண்ணீர் திறக்காத கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்த மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை. மத்திய நீர்வளத்துறை வாயிலாகக் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், இத்தகைய 'பொம்மை ஆணையத்தை' வைத்துக்கொண்டு தமிழகத்திற்கான உரிமையைப் பெற முடியாது என அன்புமணி சாடியுள்ளார்.
2007-இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 'பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்' (Bhakra Beas Management Board) போன்ற அதிகாரமிக்க அமைப்பை உருவாக்க வேண்டும். காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும், நீர் திறப்பையும் நேரடியாகக் கையாளும் அதிகாரம் அந்த வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
அணைகளைக் கையாளும் அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவதுடன், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!