தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மராத்வாடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை நீண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பாதைதான் இந்த மழைக்கு முக்கிய காரணம். இது உள் கர்நாடகா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக செல்வதால், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து மழை வாய்ப்பு உருவாகியுள்ளது.
இன்று (வியாழன்) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: நீலகிரி, கோவை, தேனியில் இன்று கனமழை! சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (வெள்ளி) நிலைமை சற்று மாறும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் கனமழை தொடரக்கூடும். அதேநேரம் இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும்.
நாளை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்து 36-37 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.மீனவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.
நாளை அந்தமான் கடலின் சில பகுதிகளில் இதேபோன்ற பலத்த காற்று தொடரும். எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கனமழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் மக்கள் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் போன்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவு வாய்ப்பு உள்ளதால் ஆபத்தான இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் சாலை வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இடியுடன் கூடிய மழையின் போது மரங்களின் கீழ் நிற்காமல் இருப்பதும், மின்சாரக் கம்பிகளிடமிருந்து விலகி இருப்பதும் அவசியம்.வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலவரத்தைக் கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!