திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரியூர் கிராமத்தில், கோயில் திருவிழா பேனர் கிழித்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், பட்டியல் சமூக இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த முத்துராஜாசமூகத்தினர் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 18-ம் தேதி, அடையாளம் தெரியாத நபர்களால் இந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இதனைச் செய்திருப்பார்கள் என நினைத்த முத்துராஜா சமூகத்தினர், அவர்கள் மீது குற்றச்சாட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் சாதி ரீதியான பதற்றம் நிலவி வந்தது.
சம்பவத்தன்று (மே 18) இரவு சுமார் 12 மணி அளவில், ஒரு (முத்துராஜா) சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், பாதிக்கப்பட்ட சிலம்பரசன் என்பவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது வீட்டில் வெளியே அமர்ந்திருந்த சிலம்பரசனை வழிமறித்து, சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டியுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அக்கும்பலைச் சேர்ந்த தீபக் என்பவர், உனக்கு அவ்வளவு திமிரா எனக் கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் சிலம்பரசனின் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும், அவருடன் வந்த மற்ற நபர்கள் கட்டை மற்றும் பாட்டில்களால் சிலம்பரசனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அவரது மனைவி நந்தினியையும் தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த சிலம்பரசன் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலில் லால்குடி அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சிலம்பரசனின் மனைவி நந்தினி அளித்த புகாரின் பேரில், லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் (A1) (வயது 24) , தீபக் (A2) (வயது 21), நிஷாந்த் (A3) (வயது 23), சந்துரு (A4) (வயது 28), ஜனார்த்தனன் (A5) (வயது 26), முகி (A6) (வயது 17 ), ரெங்கராஜ் (A7) (வயது 27), ஹேமந்துகுமரன் (A8) (வயது 22) என 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காவல்துறை பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர்.. சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே?... சீறும் மக்கள்...!
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது BNS பிரிவுகள்: 191(2), 191(3), 296(b), 118(1), 109(1). மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) :- 3(1)(r), 3(1)(s), 3(2)(va). கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்போது அரியூர் கிராமத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் விழாவில் ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!