தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், மதுரையில் இன்று நடைபெற்ற மாபெரும் இணைப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் (OPS) ஆகிய இரு பெரும் துருவங்கள் கைகோர்த்தன. சுமார் 50,000 ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த ஓபிஎஸ்-ஐ வரவேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார்.
எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல, நானும் ரசிகன்தான். கழகம் (திமுக) எம்ஜிஆரை வளர்த்தது, அவரும் கழகத்தை வளர்த்தார். அந்தப் பாரம்பரியம் இன்று மீண்டும் ஒரு புள்ளியில் இணைந்துள்ளது என முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. தாமதமாகத் திரும்பினாலும், ஓபிஎஸ் தனது தாய் மடிக்கே (திமுக) திரும்பியுள்ளார். சில காலத்திற்கு முன்பு வரை தான் இங்கு இருப்போம் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்" என்றார் ஸ்டாலின்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறிவிட்டது! ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!
ஓபிஎஸ் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் விசுவாசம். அதனால்தான் ஜெயலலிதா தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையை அவருக்கு வழங்கினார். விசுவாசத்திற்கு ஒரு பன்னீர்செல்வம் அடையாளம் என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி எனச் சாடினார்.

ஓபிஎஸ் எப்போதும் சிரித்த முகமாக இருப்பதுதான் அவரது பண்பு. ஒருமுறை சட்டப்பேரவையில் என்னைப் பார்த்து அவர் சிரித்ததே அப்போது பெரிய பிரச்சனையாக்கப்பட்டது. யார் என்ன சொன்னாலும் தனது பண்பை மாற்றாமல் இன்றும் அதே சிரித்த முகத்துடன் இருக்கிறார் என முதல்வர் புகழ்ந்தார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும், பீகாரில் நிதிஷ்குமாருக்கும் என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார்.
இந்த விழாவின் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் அடித்தளம் தகர்ந்துவிட்டதாகவும், ஓபிஎஸ் - ஸ்டாலின் கூட்டணி 2026 தேர்தலில் ஒரு மெகா வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: தனிமரம் தோப்பாகாது...ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்து ஜான் பாண்டியன் விமர்சனம்!