தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் திகழும் மதுரையில் இன்று நடைபெற்ற 'தாய்க் கழகத்தில் இணையும் விழா'வில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) தனது 50 ஆண்டு கால அரசியல் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 50,000 ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த அவர், உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
துரோகத்தால் பழிவாங்கப்பட்ட என்னை, முதலமைச்சர் தளபதி அவர்கள் அன்போடு அழைத்து, பண்போடு பாசம் காட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் அரவணைப்பை எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் தளபதி வழங்கி இருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக, இன்று ஒரு சிலரின் பிடியில் சிக்கி 'அபகரிப்பு அதிமுக'வாக மாறியுள்ளதாகச் சாடினார். அண்ணா போதித்த சமூக நீதிக்கு எதிராக தற்போது அதிமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தனிமரம் தோப்பாகாது...ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்து ஜான் பாண்டியன் விமர்சனம்!
50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கொள்கைக்கு நேர்மையாக, மனசாட்சியுடன் பணியாற்றிய என்னை, தாய்க் கழகமான திமுகவில் தாயுள்ளத்தோடு இணைத்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தமிழகத்தில் சமூக நீதியைக் காக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும், அதற்காகத் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பாடுபடப் போவதாகவும் உறுதி அளித்தார்.
இந்த விழாவின் மூலம் தென் தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஓபிஎஸ் அவர்களின் வருகை, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிடித்த சனி விட்டுவிட்டது.. அதிமுகவுக்கு இன்றுதான் தீபாவளி! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்!