கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான உயிர்காக்கும் ஊசி மருந்து 'போர்டெசோமிப்' (Bortezomib 2mg) கடந்த மூன்று மாதங்களாக தட்டுப்பாடு நிலவுவதால், ஏழை நோயாளிகள் தனியார் மருந்தகங்களில் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதால், ஏழை, நடுத்தர மக்கள் முதலில் இங்கேயே வருகின்றனர். ஆனால், ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களுக்கு மிக முக்கியமான 'போர்டெசோமிப்' ஊசி மருந்து டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி கூறுகையில், "வாரந்தோறும் இந்த ஊசி செலுத்த வேண்டும். ஆனால் மருந்து இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புகிறார்கள். நர்ஸ்கள் 'எங்கே வாங்கலாம்' என்று தனியார் மருந்தக முகவரிகளை சொல்கிறார்கள். ஒரு ஊசி 600 முதல் 1,000 ரூபாய் வரை விலை. கூலி வேலை செய்பவர்கள் எப்படி வாரந்தோறும் இவ்வளவு பணம் செலவழிப்பது? முன்கூட்டியே ஏன் வாங்கி வைக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விமான பயணிகளுக்கு இனி கூடுதல் சுமை இல்லை! 60% இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை!

பல நோயாளிகள் திரும்பி அனுப்பப்படுவதால், சிகிச்சை தாமதமாகி நிலைமை மோசமடைவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் கீதாஞ்சலி கூறியதாவது: "உயிர்காக்கும் மருந்துகள் நோயாளிகளின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கப்படுகின்றன. நிதியாண்டு இறுதி என்பதால் இந்த மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போதைய தேவைக்கு 50 ஊசிகளை வெளி மருந்தகங்களில் இருந்து உடனடியாக வாங்க முடிவு செய்துள்ளோம். இனி நோயாளிகளுக்கு சிரமம் இருக்காது" என்றார்.
இருப்பினும், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் "ஏன் முன்கூட்டியே தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கிறார்கள்? உயிருக்கு ஆபத்தான மருந்துகளை ஏன் தொடர்ந்து இருப்பு வைக்க மாட்டீர்கள்?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கோவை போன்ற பெரிய அரசு மருத்துவமனையில் இத்தகைய தட்டுப்பாடு ஏற்படுவது ஏழை புற்றுநோயாளிகளுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. இச்சம்பவம் மருத்துவத் துறையில் உள்ள குறைகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!