தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது காவலர்கள் மீதான புகார் அளிக்க whatsapp எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல்துறையில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர் பெரும்பாலும் நேர்மையுடன் பணியாற்றி வரும் நிலையில், ஒரு சிலரின் லஞ்ச நடவடிக்கைகள் ஒட்டுமொத்த துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதால், இதைத் தடுக்கவும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் இந்த சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரிவின் மூலம், காவல் பணியாளர்கள் தங்கள் அலுவல் கடமைகளைச் செய்ய லஞ்சம் கோரினால், பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ 78717-23000 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் அடையாளம் மற்றும் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. வரும் அனைத்து தகவல்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: "தமிழ் வழி கல்வி"..! காவலர்களுக்கான உரிமையை காப்பாற்றுங்கள்..! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்..!!
மேலும், காவல் சேவைகளுக்கு எந்தவிதமான பணம் அல்லது லஞ்சமும் வழங்க வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காவல் பணிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே உள்ளன என்றும், அதில் எந்தவித பணப் பரிமாற்றமும் இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த தனிப்பிரிவு, லஞ்சப் புகார்களை நேரடியாகப் பெற்று உள்நாட்டில் விசாரணை நடத்தி ஊழலை ஒழிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி..! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! காவலர் சஸ்பெண்ட்..!!