தமிழக வெற்றிக் கழக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தபோது, கோயில் நடை அடைப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று காலை மதுரை வந்த அமைச்சர் நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மதியம் 12:55 மணிக்கு அவர் கோயிலுக்கு வந்தபோது, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அமைச்சர் துணை கமிஷனர் மற்றும் அறங்காவலர்கள் உடனிருக்க, 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மூலஸ்தானத்துக்குச் சென்று தரிசனம் செய்தார்.
வழக்கமாக மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை தொடங்கி, 12:45 மணிக்கு ராஜகோபுர கதவுகள் சாத்தப்படும். பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அமைச்சர் வருகையை முன்னிட்டு நடை அடைப்பு நேரம் தாமதப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

அமைச்சர் மதியம் 1:00 மணிக்கு உள்ளே சென்று 1:06 மணிக்கு மூலஸ்தானத்தில் தரிசனம் முடித்து, 1:15 மணிக்கு வெளியேறினார். அதன் பின்னரே கோயில் நடை சாத்தப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு ஏற்பாடாக பெரிய நிலைக்கதவு திறக்கப்பட்டு முன்பக்க வாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டார்.
பக்தர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “பொதுமக்கள் மதியம் 12:45 மணிக்கு மேல் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், அமைச்சருக்காக மட்டும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டது ஏன்?” என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக திருமண நாள் மற்றும் பக்தர் கூட்டம் அதிகமுள்ள நாட்களிலும் கோயில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதை சுட்டிக்காட்டி பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் வருகை மற்றும் தரிசனம் கோயில் அதிகாரிகளால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் நடை அடைப்பு நேரம் மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் கோயில் நிர்வாக விதிமுறைகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: சொல்லி கேட்கலன்னா இது தான் கதி... சாட்டையை சுழற்ற ஆரம்பித்த விஜய்... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!