கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே ஆட்டம் காண வைத்த கொரோனா தொற்று பல உயிர்களை காவு வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். படிப்படியாக ஏற்பட்ட மிகக் கடுமையான பாதிப்புகள் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டது. வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதார பாதிப்புகள் உலகம் முழுவதும் ஏற்பட்டு, மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். கோவிட்-19 தடுப்பூசி உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக கொரோனா அலை ஓய்ந்தது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வீரியம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவாச நோய் தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை சிந்து நதி பேச்சுக்கே இடமில்லை.. பாகிஸ்தானுக்கு இந்தியா கறார் பதில்..!

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவில் நேற்று (ஜூன் 09) ஒரே நாளில் மட்டும் 324 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை 6,815 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 2,053 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீரிழிவு, சிறுநீரகம், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அதே நேரத்தில் நாம் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி பிரண்ட்ஷிப் தான்.. இறங்கி வரும் வங்கதேசம்! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய யூனுஸ்..!