கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப் போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதேசமயம் கோடை வெயில் நீடித்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி ஜூன் 2 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மகப்பேறு விடுமுறையில் முக்கிய மாற்றம்... அரசின் அறிவிப்பால் குஷி ஆன பெண் அரசு ஊழியர்கள்!!

பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நகரங்களில் வசிக்கும் பிள்ளைகள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கும், வெளியூருக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்ற குழந்தைகளும் பெற்றோர்களும் சொந்த ஊர் கிளம்பி கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் ஜூன் 2 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 9 ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் பரவியது. இதுக்குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாததற்கு காரணமே இதுதான்... நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!!