சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளின் நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்து வருவதாகவும், தேர்தல் நெருங்கும்போது மட்டுமே தமிழ்நாட்டு விவசாயிகள் மீது பாசம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடிக்கு விவசாயிகள் குறித்து பேச தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். "தேர்தல் வந்தவுடன் பிரதமருக்கு திடீரென விவசாயிகள் மீது அக்கறை ஏற்படுகிறது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக என்ன செய்தார்? இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

குறிப்பாக, லகிம்பூர் கேரி சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டதை மக்கள் மறக்கவில்லை என்று வலியுறுத்தினார். திருச்சியில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்தில் விவசாயிகளின் நண்பன் போல் நடித்தது கபட நாடகம் மட்டுமே எனவும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!
மேலும் மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று 2016-ல் பிரதமர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
"விவசாயிகளின் எதிரியான மோடியையும், அவருக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமியையும் தமிழ்நாட்டு விவசாயக் குடும்பங்கள் என்றென்றும் மன்னிக்காது" என்று கடுமையான வார்த்தைகளால் அமைச்சர் தாக்குதல் நடத்தினார். தேர்தல் நெருங்கியதால் திருச்சி கூட்டத்தில் "ஆத்தோ ஆத்து" என்று உரையாற்றியது பொய் பிரசாரம் மட்டுமே எனவும், வறண்ட கேப்பையில் நெய் வடிவது சாத்தியமில்லை என்றும் உவமை மூலம் விளக்கினார்.

மாறாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் விவசாயம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். முந்தைய அதிமுக ஆட்சியில் நசிந்து கிடந்த விவசாயத்தை மீட்டெடுக்க, தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண் துறைக்காக ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உழவர்களின் நலனுக்கும், உழவுத் தொழிலை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, சாகுபடி நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும் மாநில அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!