திமுகவின் முப்பெரும் விழா இந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த முக்கிய நிகழ்வு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை ஒன்றிணைத்து நடத்தப்படுவதாகும். இந்த ஆண்டு இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் மாலை ஐந்து மணியளவில் தொடங்கியது.
முதலில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த இந்த விழா, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. உடல்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, மாற்றுத் தேதியாக செப்டம்பர் 19 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டு வந்துள்ளனர். மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.திமுக 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது.

அதற்கு முன்னர் தந்தை பெரியார் வழிகாட்டிய திராவிடர் கழகத்தின் கீழ் இயங்கிய இயக்கம், தனிக் கட்சியாக உருவெடுத்தது. ஆண்டுதோறும் இந்த மூன்று நாட்களையும் இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடும் வழக்கம் 1974ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது சென்னை மெரினாவில் முதல் விழா நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ந்து இந்த நிகழ்வு கட்சியின் முக்கிய ஆண்டு விழாவாகத் திகழ்கிறது. கட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய மூத்த தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கௌரவிக்கும் வகையில் 1985ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க. ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: #BREAKING வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு... உயிருடன் கொல்ல முயன்ற இளைஞர் தப்பியோட்டம்...!
பெரியார் விருது விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பாவுக்கு, அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே. சுபாஷுக்கு, கலைஞர் விருது துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவாவுக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது மருத்துவ அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமுவுக்கு, பேராசிரியர் விருது தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பிக்கு, மு.க. ஸ்டாலின் விருது இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜாவுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருது ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப. திருமாவேலனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாக வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதையும் படிங்க: இனி ஆன்லைன் தான்..! குடிநீர், கழிவுநீர் இணைப்பு..! முக்கிய அறிவிப்பு..!!