அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியபோது, தற்போதைய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தார். விபத்து போல் ஆட்சிக்கு வந்தவர்கள் என்றும், ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து ‘வெற்றி’ என சூட்டி மகிழ்கிறார்கள். ஆனால் அந்தத் திட்டங்களைக் கொண்டுவந்தது அதிமுக தான். அம்மாவின் சிந்தனையில் உதித்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை பெயர் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் அது தொடங்கப்படவில்லை.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்ற பெயரில் பிறந்த குழந்தையை ஏமாற்றும் அளவுக்கு ஒரு கிராம் தங்கம் கொடுக்கிறார்கள். ஒரு ரூபாய் செலவு செய்து ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூலதனமே ரீல்ஸ் தான். ரீல்ஸை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!
”மேலும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெகவை ஆதவ் அர்ஜுனா குத்தகைக்கு எடுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா தன்னைச் சந்தித்து அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டதாகவும், அதற்கு “அதிமுகவில் பதவி விற்பனை கிடையாது. உழைப்பவர்களுக்கே பதவி” என்று தான் பதிலளித்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு தவெகவிற்குச் சென்று அக்கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார் என்று சாடினார்.

கரூர் சம்பவத்தின் போது வீரவசனம் பேசிய ஆதவ் அர்ஜுனா, பின்னர் வெளிமாநிலத்திற்குச் சென்று தங்கிவிட்டதாகவும், அக்கட்சியின் தலைமை அலுவலகமே 15 நாட்களுக்கு மூடப்பட்டிருந்ததாகவும் அவர் விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் பெயர் மாற்றியும், விளம்பரங்களில் கவனம் செலுத்தியும் ஆட்சி நடத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கடுமையான விமர்சனம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: “வெற்றி பெற்றே ஆக வேண்டும்”..!! இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் தீவிர ஆதரவு வேட்டை!!