மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நாளை (மே.16, 2026) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு திணித்த நீட் தேர்வு கடந்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்களின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு இத்தேர்வால் சிதைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் பரவலான முறைகேடுகள் இழைக்கப்பட்டதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டு, இந்த ஆண்டு தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், நீட் தேர்வை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரல் என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் திராவிடர் கழகம் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைத்துள்ள “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை” திமுக வரவேற்பதாகவும் பாரதி கூறினார்.
இதையும் படிங்க: தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு நீண்டகாலமாக இருந்து வருகிறது. மாநில அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் நீட் விலக்கு கோரியும், அது நிராகரிக்கப்பட்டது. இதனால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பயிற்சி மையங்கள் இல்லாத சூழலில் போட்டித்தேர்வில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்தங்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், திராவிடர் கழகத்தின் இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வின் அனைத்து அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வு என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மத்திய அரசு மாநிலத்தின் கல்வி உரிமையை மதித்து, நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க: என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!