தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளங்களில் கசிந்த விவகாரம், தற்போது ஒரு முக்கிய தொழில்நுட்பக் கலைஞரின் பதவி நீக்கத்தில் முடிந்துள்ளது. இப்படத்தின் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய பிரதீப் ராகவ், தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தில் (SICA Edit) இருந்து இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளார்.
திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்ததற்கு எடிட்டர் பிரதீப் ராகவ் நேரடியாக எந்த உள்நோக்கத்துடனும் செயல்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் எடிட்டிங் ஸ்டுடியோவில் அவரது மேற்பார்வையில் இருந்தபோது, போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரு படத்தின் ரகசியத்தைப் பாதுகாப்பதில் எடிட்டருக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதால், அவரது 'கவனக்குறைவை' (Negligence) மன்னிக்க முடியாது எனச் சங்கம் கருதுகிறது.

தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தயாரிப்பாளரின் பல கோடி முதலீட்டையும், பலரது உழைப்பையும் பாதுகாப்பது ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் கடமை. ஜனநாயகன் படக் கசிவு விவகாரத்தில், எடிட்டர் பிரதீப் ராகவ் தரப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சங்க விதிகளின்படி அவர் தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை ஒட்டி உருவானதாகக் கருதப்படும் இந்தப் படத்தின் கசிவு, படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்படி கசிந்தன என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதீப் ராகவ் மீதான இந்த நடவடிக்கை, மற்ற எடிட்டர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் யுகத்தில் ஒரு படத்தின் காட்சிகள் கசிவது தயாரிப்பாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால், சங்கங்கள் தங்களது கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், 'ஜனநாயகன்' போன்ற ஒரு அரசியல் சார்ந்த படத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஜனநாயகன்" படக்குழுவிற்கு முதல் வெற்றி! லீக் செய்த இணையதளங்களை முடக்கியது சைபர் கிரைம் போலீஸ்!