தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பாக மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலரிடையே ஆர்வத்தையும், அவசரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏபிரல் 6ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது மாநிலத்தில் மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாகப் பதிவாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தொடர்ச்சியான திருத்தப் பணிகள் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் நடைபெறும். ஆனால், தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு, வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை மட்டுமே பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் வேட்புமனு கடைசி தேதி ஏப்ரல் 6ஆம் தேதியாக இருப்பதால், மார்ச் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே அந்தப் பெயர்கள் தேர்தலுக்கு முன்பாக பரிசீலிக்கப்பட்டு, துணைப் பட்டியலில் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான குடிமக்கள், படிவம்-6 (Form-6) மூலம் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதை நேரடியாக தொகுதி தேர்தல் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம் அல்லது இணையவழியில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் விடுபட்டு இருந்தால், அதனை சேர்க்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. http://voters.eci.gov.in அல்லது ECINet செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இப்போதே பதிவு செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றால் மட்டுமே வரும் தேர்தலில் உங்களால் வாக்களிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: என்ன பிரதமரே நீங்க ரெடியா? மக்களுக்கு எதுக்கு அறிவுரை?... முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!