கோரிக்கை மனு என்ற பெயரில் பெட்டிகளை வைத்து மனுக்கள் வாங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக எதிா்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதும், அம்மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதும் நடைமுறை.
கடந்த 1991 - -96ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவை கணினி மயமாக்கியதுடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தனி அதிகாரியாக நியமித்தார்.

பின், 2012ல், 'அம்மா திட்டம்' என்ற ஒன்றை ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரிகள் வாரந்தோறும் நேரில் சென்று, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.
இதையும் படிங்க: அப்ப சேலம்.. இப்போ சென்னை.. எடப்பாடி பழனிசாமிக்கு சோதனை மேல் சோதனை..!
அதேபோல, 2019ல், முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் வாயிலாக, நானும், அமைச்சர்களும் மக்களிடம் மனுக்களை பெற்று, 5 லட்சத்து 8,179 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், தமிழகம் முழுதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இன்றுவரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டனவா; எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன; அவை தீர்க்கப்பட்டனவா என்று, நான் பலமுறை கேட்டும் பதில் இல்லை.
அந்த பெட்டிகளின் சாவிகளை, ஸ்டாலின் தொலைத்து விட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். அன்று மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு வழங்கிய ஸ்டாலின், அதை எடுத்துக்கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து முதல்வர் அறையில் தன்னை சந்திக்கலாம் என்று, பசப்பு வார்த்தை பேசினார். இதுவரை ஒருவர்கூட சந்தித்ததாக தெரியவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடம் மனுக்களை பெறுவதற்குக்கூட, 'முதல்வரின் முகவரித் துறை, உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர் -- நகரம் மற்றும் ஊரகம், மக்களுடன் முதல்வர்- - பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்' என்று, பல்வேறு பெயர்களைச் சூட்டி ஏமாற்றியதுதான் மிச்சம்.
இப்போது மீண்டும் மக்களை ஏமாற்ற, இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெறும் திட்டமிட்ட நாடகத்தை, அரங்கேற்ற உள்ளதாக தெரிய வருகிறது. முதல்வரின் தனிப்பிரிவிற்கு கலர் கலராக, காகிதப் பூக்களைப் போல், பல்வேறு பெயர்களைச் சூட்டி, அப்பாவி தமிழக மக்களின் காதுகளில் காகிதப்பூ சுற்றி, வேடிக்கை விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார், விளம்பர மாடல் முதல்வர் ஸ்டாலின்.

இந்த உண்மைகளை உணர்ந்தும், கூட்டணி தர்மம் என்ற பெயரால், பல கட்சிகள் அறிவாலயத்தை சுற்றிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா, ரோஜாதான். அது ரோஜா பூவுக்கு உள்ள பெருமை.
அதுபோல், மக்களிடம் மனு வாங்கி அவா்களின் குறைகளை நிவா்த்தி செய்வதுதான் ஓா் ஆட்சியின் கடமை. ஆனால், ஒரு திட்டத்துக்கு பல்வேறு பெயா்களைச் சூட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் நினைத்தால், 2026 சட்டப்பேரவைத் தோ்தலின்போது தக்க பதிலடி தருவதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்
இதையும் படிங்க: பூச்சாண்டி காட்டாதீங்க ஸ்டாலின்! முதலமைச்சர் போட்ட ட்வீட்.. மொத்தமாய் முடித்து வைத்த இபிஎஸ்..!