திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவிலுக்கு சென்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், சாமி கும்பிட்டு விட்டு தான் கொண்டு வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள 2 வீட்டுப் பத்திரங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் உண்டியலில் விழுந்த காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் இன்று எண்ணப்பட்டது. அப்போது உண்டியலுக்குள் சொத்து பத்திரங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், இதுகுறித்து விசாரித்ததில் இந்த சொத்து பத்திரங்களை உண்டியலில் செலுத்தியது திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 65) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: இம்மாதூண்டு திறமை கூட இல்ல... முக்கிய துறைகளில் வேலுவுக்கு ஏன் முன்னுரிமை? அன்புமணி விளாசல்!
முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். கஸ்தூரி கண்ணமங்கலம் அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சொத்து பத்திரம் பற்றி விஜயனிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டபோது, இந்த சொத்துக்களை முறையாக கோவிலுக்கு எழுதி தருவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கும் தனது மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், என் மகள்கள் என்னை அப்பா என்றும் பாராமல் சொத்துக்காக துன்புறுத்தியதாகவும் அதனாலேயே அவர்களுக்கு தெரியாமல் சொத்து பத்திரத்தை கடந்த மே மாதம் 2ம் தேதி உண்டியலில் போட்டதாகவும் விஜயன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கோவில் உண்டியலில் கணவர் விஜயன் பத்திரத்தை போட்ட தகவல் அறிந்து அவரது மனைவி மகள்களையும் கையோடு அழைத்து அங்கு வந்தார். அப்போது கோவிலுக்கு இந்த சொத்துக்களை வழங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர். மேலும், கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அரைகுறை ஹாஸ்பிட்டல்..வாய் பந்தா அமைச்சர்... எங்கபோய் முடிய போகுதோ! இபிஎஸ் வார்னிங்