தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஏக்கர் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் முழுவதும் தள்ளுபடி என்றும், ஐந்து ஏக்கர் மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பின்பு வெறும் 50,000 வரை கடன் வாங்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு தான் முழுமையான கடன் தள்ளுபடி என்கிற ஒரு அறிவிப்பை தவெக அரசு வெளியிட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, விஜய் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையிலும், தவெக அரசை கடுமையாக விமர்சித்தும் முன்னாள் நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!” என சாடியுள்ளார்.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... கோவையில் தீயாய் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா...!