வேலூர் அருகே மின் வேலியில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம். தந்தையை காப்பாற்ற சென்ற இரண்டு மகன்களும் உயிரிழந்த சோகம்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(55), இவர் நர்சரி கார்டன் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி மல்லிகா(50), இவர்களுக்கு விக்காஸ்(25), லோகேஷ்(23), ஜீவா(22) ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் விக்காசிற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது... அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்...!
மேலும், விக்காஸ், அவரது தம்பி ஜீவா ஆகியோர் சொந்த ஊரிலேயே இருந்து அப்பாவிற்கு உதவியாக நர்சரி பார்த்து வந்துள்ளனர்.
2வது மகன் லோகேஷ் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஜானகிராமன் தனது 2 மகன்களை அழைத்து கொண்டு இரவு நர்சரி பக்கம் சென்றுள்ளார். மேலும், அப்பா ஒருபுறமும், மகன்கள் மற்றொருபுறமும் சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென ஜானகிராமனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன 2 மகன்களும் அப்பாவை காண சத்தம் வந்த திசையை நோக்கி சென்றுள்ளனர்.
அங்கு ஜானகிராமன் நர்சரி கார்டனை ஒட்டி உள்ள பக்கத்து விவசாய நிலத்தில் வனவிலங்குகளுக்கு வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி துடித்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதனை பார்த்த 2 மகன்களும் அப்பாவை காப்பாற்ற முயற்சி செய்த போது அவர்களும் மின் வேலியில் சிக்கி கொண்டனர்.
இதனால் சிறிது நேரத்திலேயே 3 பேரும் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது 3 பேரும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், இதுகுறித்து உடனே வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து முதலில் மின் இணைப்பை துண்டிக்க செய்தனர்.
பின்னர், 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகராமல் நங்கூரமிட்ட‘டிட்வா’...!! சென்னையில் 2 நாட்களாக மழை வெளுத்து வாங்க இதுவே காரணம் - வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்...!