தமிழகக் காவல்துறையின் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கானத் தேர்வில், பாடத்திட்டத்தில் இருந்தும் தமிழ்ப் பாடத்திலிருந்து ஒரு வினா கூடக் கேட்கப்படாதது தொடர்பாகத் தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பு திமுக அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் விடியா அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
தேர்வுக்கான பாடத்திட்டத்தை வழங்கிவிட்டு, அதிலிருந்து ஒரு கேள்வி கூடத் தமிழில் கேட்கவில்லை என்றால் எப்படி?" என்று உயர்நீதிமன்றம் திமுக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய எடப்பாடியார், தமிழுக்குத் தாங்கள் மட்டும்தான் அதிகாரம் என்பது போலப் பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூடத் தமிழில் கேட்கவில்லை? என வினவியுள்ளார்.

இந்தத் குளறுபடியால் பாதிக்கப்பட்டத் தேர்வர்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, எஸ்.ஐ. தேர்வு முடிவுகளை வெளியிட 10 நாட்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எங்கும் தமிழ் என்பது வாயளவுக் கொள்கைதானா?என எடப்பாடியார் காட்டமாகக் கேட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்-2, கூட்டுறவுத் துறைத் தேர்வு மற்றும் தற்போது எஸ்.ஐ. தேர்வு எனத் தமிழக அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் குளறுபடிகள் நடப்பதை எடப்பாடியார் பட்டியலிட்டுள்ளார். "இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று கடந்துவிட முடியாது. நகராட்சித் துறை ஊழலுக்குப் பிறகு, வாங்கியதை எல்லாம் திருப்பிக் கொடுக்காமல் இருக்க இப்படி வேண்டுமென்றே குளறுபடிகள் செய்யப்படுகிறதோ?" என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: இரட்டை இலை கிடையாது.. சொந்த சின்னத்தில்தான் போட்டி! அதிமுக சந்திப்பிற்கு பின் பாரிவேந்தர் அதிரடி பேட்டி!
3.50 லட்சம் அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் பொய் வாக்குறுதி அளித்து, தற்போது இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசை விரட்டியடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டதாக அவர் எச்சரித்துள்ளார். இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள அதிமுக அரசு, அனைத்துத் தேர்வுகளையும் முறையாக நடத்தி, தகுதியுள்ள இளைஞர்களை அரசுப் பணிகளில் அமர்த்தி அழகு பார்க்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசின் தமிழ் மொழிப் பற்று குறித்த எடப்பாடியாரின் இந்தக் கேள்வி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.