கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், சொந்த ஊர் திரும்பும் மக்கள், குடும்பத்துடன் சுற்றுலா மற்றும் விஷேசங்களுக்கு செல்வதற்காக வந்திருந்த மக்கள் நீண்ட நேரமாக குழந்தைகளுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

நீண்ட நேரம் காத்திருந்தும், பேருந்துகள் வராததால் அதிருப்தி அடைந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பயணிகள் பொறுமையை இழந்து நள்ளிரவு 11 மணியில் இருந்து, புறப்படும் பேருந்துகளை சிறை பிடிக்கும் விதமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!
இதுகுறித்து கேள்வி எழுப்பி தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு மக்கள் பல மணி நேரம் காத்திருந்து உள்ளனர்.இதுபற்றி பஸ் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படி போராட்டங்களாலும், பற்றாக்குறைகளாலும் பொதுமக்களை வாட்டி வதைப்பதற்கு பெயர் தான் "நாடு போற்றும் நல்லாட்சியா? கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்குக் கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. பஸ்களோடு சேர்ந்து மொத்த போக்குவரத்துத்துறையும் பழுதாகிவிட்டதா?
மக்கள் வரிப்பணத்தை கொட்டி கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு தனது தந்தையின் பெயரை சூட்டி விளம்பரப்படுத்தி கொள்வதில் அத்தனை அக்கறையுடனும், அவசரத்துடனும் முதல்வர் ஸ்டாலின் செயலாற்றினார். ஆனால், அந்த பஸ் நிலையம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய தவறிவிட்டார். இது வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுகிறது.

இரவில் சாலை ஓரங்களிலும், பஸ் நிலையத்திலும் காத்திருந்த வயதான பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவலநிலையை பற்றியெல்லாம் திமுக அரசிற்கு எந்தக் கவலையும் இல்லை. பல நாடுகளுக்கு ஒய்யாரமாக சுற்றுலா செல்லும் முதல்வர், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவையை மறந்துவிட்டார் போல.
பொதுமேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதை விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்தி தமிழக மக்களின் அடிப்படை தேவைகளுக்கு திமுக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும், இரவு நேர பஸ் வழித்தடங்கள், டிக்கெட் கண்காணிப்பு, அலுவலக நேரம் மற்றும் பலவற்றை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் தவெக? நயினார் நாகேந்திரன் போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்கிய விஜய்..!