தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; பாஜக கூட்டணிக்கு அழைத்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தமிழக வெற்றி கழகம் மறுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, அது என்னுடைய நோக்கம் எங்களைப் பொறுத்தவரை மக்கள் விரோத ஆட்சியாக இருக்கக்கூடிய திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்... அதற்காக தான் நான் என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அவர்களுடைய எண்ணம் எதுவாக இருந்தாலும் அது அதுவாகவே இருக்கட்டும். எங்களை பொறுத்தவரை இந்த ஆட்சியை அகற்றுவதற்கு நாங்கள் முழு மூச்சாக உழைக்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!
திமுக கூட்டணி கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் திமுக ஆட்சி நீதி அதிருப்தி உள்ளது,திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஓரணியில் சேர வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க விரும்பியதாக ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகிறது...அப்போது என்ன சூழல் இருந்தது யார்யார் என்ன பேசினார்கள் என்பது,நேற்று நடந்ததே இன்று நிறைய பேருக்கு நியாபகம் இருக்காது என கூறினார்.

ஆல் இந்தியா ரேடியோ பகலில் தமிழிலும் இரவில் இந்தியிலும் ஒளிபரப்பப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரை எல்லாமே தமிழில் தான் இருக்க வேண்டும் சில நேரங்களில் ஆங்கிலம் இந்தியில் வருவதை தவிர்த்து முடியாது என்றாலும் தமிழக பாஜகவை பொறுத்தவரை அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம்.
மதுரையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பகுதியில் கால்வாய் தூர்வாரப்படாததால் திரை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ஆறுகளை தூர்வார வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்திருகிறார்...ஆனால் தமிழ்நாடு அரசுதான் ஆறுகளை தூர்வார வேண்டும் இதுவரை தாமிரபரணி ஆறு தூர்வாரப்படாமல் உள்ளது. முதலமைச்சர் செல்லும் இடத்திலும் கால்வாய் தூர்வாரப்படாமல் மோசமான நிலையில் தான் உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

கன்னட மொழி குறித்த கமலஹாசன் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அவரவர்களுக்கு அவரவர் தாய்மொழி பெரியது, அடுத்தவர் தாய்மொழி குறித்து குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கமலஹாசனின் பதிலைப் பொறுத்தவரை நான் சொல்லிவிட்டேன் அதை குறையாக சொல்லவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள முடியும் இதற்குப் பிறகு இதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
பாமக பிரச்சினை குறித்த கேள்விக்கு, அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை அதில் நாம் கருத்து தெரிவிக்க முடியாது. அவர்கள் ஒருமித்த கருத்தாக எங்கள் கூட்டணிக்கு வரும் போது கூட்டணி பற்றி வேண்டுமானால் பேசலாம். அரக்கோணம் விவகாரத்தில் தெய்வ செயல் என பெயரை வைத்துக்கொண்டு செயலை எல்லாம் பாவ செயலை செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார், அவரை ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதெல்லாம் இரண்டாம் தேதி தீர்ப்புக்கு பிறகு பேசுகிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் சொல்வது வடிகட்டுன பொய்.. யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கையை வெளியிடுகிறார்.. அதிரடி கிளப்பும் சேகர்பாபு..!