திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பாலமுருகன் உயிரிழந்த சமயத்தில் அனைவருக்கும் தகவல் சொல்லி அனைத்து தமிழரசன் என்பவர் தனது நண்பனை கொன்று விட்டார்களே என அழுது புலம்பி நாடகமாடியுள்ளார் இவர் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து, காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். அதில் தனது நண்பர்களான சுமன், நரசிம்ம பிரவீன், அஸ்வின், ராமலிங்கம் ஆகியோருடன் இணைந்து பாலமுருகனை வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் இந்து முன்னணி நிர்வாகியும் தற்போது இந்திய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவரான சுமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த நரசிம்ம பிரவீன் அஸ்வின் ராமலிங்கம் ஆகிய மூன்று பேரை நேற்றிரவு கைது செய்தனர்.
இதையும் படிங்க: 85 வயது மூதாட்டியை அடித்தே கொன்ற நிர்வாகி.. அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகியான பாலமுருகனுக்கும், முன்னாள் இந்து முன்னணி நிர்வாகி சுமனுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே பிரச்சனைகள் இருந்து வந்தது. தன்னால் கட்சியில் சேர்த்து விடப்பட்ட பாலமுருகன், தான் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு காரணமாக இருந்ததுடன், அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதும் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதனிடையே பாலமுருகன், சுமனை தீர்த்து கட்ட நல்ல சமயம் எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று, ராமலிங்கம் வீட்டில், நரசிம்ம பிரவீன், அஸ்வின், ராமலிங்கம், தமிழரசன் மது அருந்தி உள்ளனர். சுமனை தீர்த்துக்கட்ட தயாராக இருக்கும் பாலமுருகனை உயிருடன் விடக்கூடாது என்றும், நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, பாலமுருகனை போன் மூலம் அழைத்து வீட்டிலிருந்து வெளியே வர செய்துள்ளனர். வீட்டுக்கு வெளியே வந்த அவரை நரசிம்ம பிரவீன் அஸ்வின் ஆகியோர் சென்று பேசுவது போல் நடித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
அஸ்வின் பாலமுருகனை கொலை செய்து விட்டதாக சுமனுக்கு மெசேஜ் மூலம் தகவல் அளித்துள்ளார். இதன் பின்னர் ராமலிங்கம் வீட்டுக்கு வந்த அவர்களை தமிழரசன் தனது இருசக்கர வாகனத்தை கொடுத்து மூவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் காலையில் கொலை நடந்த இடத்திற்கு வந்து தனது அண்ணனை கொன்று விட்டார்கள் என்று நாடகமாடியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காலுக்கு தான் குறி.. ஆனா மண்டை ஒடஞ்சி போச்சு! மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்..!