தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வணிக எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள விலை உயர்வு, விறகு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை ஹாஸ்டல் மற்றும் பேயிங் கெஸ்ட் (PG) நடத்துபவர்களை கடுமையாக பாதித்துள்ளன. இதன் காரணமாக வரும் மே 5ம் தேதி முதல் பல ஹாஸ்டல்களில் வாடகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நான்கு பேர் தங்கும் அறைக்கான மாதக் கட்டணம் ரூ.6,500ல் இருந்து ரூ.7,500க்கு உயர்த்தப்படுகிறது. மூன்று பேர் தங்கும் அறைக்கான கட்டணம் ரூ.7,000ல் இருந்து ரூ.8,000 ஆக அதிகரிக்கப்படுவதாக ஹாஸ்டல் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இந்த உயர்வு பல மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில மாதங்களாக நிலவும் வணிக எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஹாஸ்டல் மெஸ்களில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வணிக சிலிண்டருக்கு பதிலாக விறகு பயன்படுத்தப்படுகிறது. இதனால் விறகின் விலை கிலோவுக்கு ரூ.20ல் இருந்து ரூ.30க்கு உயர்ந்துள்ளது.

மளிகைப் பொருட்களின் விலையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாஸ்டல் நிர்வாகிகள் உணவு தயாரிப்பு செலவு அதிகரித்ததால் வாடகையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். “சிலிண்டர் கிடைக்காததால் கருப்பு சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விறகு பயன்படுத்தினாலும் அதன் விலை உயர்வு மற்றும் புகை, சுகாதார பிரச்சினைகள் உள்ளன. இந்த செலவுகளை ஈடுகட்ட வாடகை உயர்வு தவிர்க்க முடியாதது” என ஒரு ஹாஸ்டல் உரிமையாளர் தெரிவித்தார். பல ஹாஸ்டல்கள் இண்டக்ஷன் அடுப்பு, ராக்கெட் ஸ்டவ் போன்ற மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை..! உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!
ஆனாலும் அவற்றின் ஆரம்ப செலவும் மின்சார கட்டண உயர்வும் கூடுதல் பிரச்சினையாக உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளான புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த வாடகை உயர்வு அமலுக்கு வர உள்ளது. மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இந்த திடீர் உயர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் அறை மாற்றம் அல்லது சொந்த ஊர் திரும்பும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது..! வீடுகளுக்கு புதிய GAS சிலிண்டர் இணைப்பு நிறுத்தம்..! அடுத்தடுத்து வந்த புகாரால் நடவடிக்கை..!