விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் எழுந்திருந்த நிலையில், ஓசூரில் 20க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலத்திற்கு தமிழ்நாடு வழியாக, ஓசூர் வழியாகச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் வட்டாரப் போக்குவரத்துத் துறை இணை இயக்குநர் சுரேஷ் மற்றும் ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துரைசாமி ஆகியோரது தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்று இடங்களில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!
பேருந்து நிலையம், மாநில எல்லைப் பகுதியான ஜூஜுவாடி மற்றும் அசோக் பில்லர் ஆகிய இடங்களில் இரவு 2 மணி முதல் விடிய விடிய இந்தச் சோதனைகள் நடைபெற்றுள்ளன.
இந்தச் சோதனையின்போது, ஆம்னி பேருந்துகள் முறையாக தமிழக அரசுக்கு வரி செலுத்துகிறதா, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கிறார்களா என்பது குறித்து வாகனங்களைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது வரி செலுத்தாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இதுவரை ரூ.20 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான தகவல்களை அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததாக பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அவசரமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையைப் பயன்படுத்தி கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், ஓசூரில் நடைபெற்ற ஆம்னி பேருந்து சோதனை மற்றும் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மூன்று இடங்களில் நடைபெற்ற இந்த ஆம்னி பேருந்து சோதனைகளால், பல பேருந்துகளில் இருந்த பயணிகள் ஆங்காங்கே இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், கைக்குழந்தைகளுடன் வந்த பயணிகள் பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இதனால், அங்கிருந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பேருந்துகளில் இருந்த பயணிகள் பல்வேறு இடங்களில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!